Category: politics

  • இஸ்லாம் இல்லையேல், இந்துத்துவமும் இல்லை..!

    இஸ்லாம் இல்லையேல், இந்துத்துவமும் இல்லை..!

    ”முஸ்லிம் சமூகத்துடன் சமரசம் செய்து கொள்வது என்பது இந்து தேசியவாதத்தின் உட்சபட்ச சாதனை அல்ல; அது, அதன் இறுதி மரணமாகும்.”
    அப்படி நிகழும் என்றால் RSS தன் நெறியழகையும், தனது அமைப்பு நிலைநிற்றலுக்கான தார்மீக காரணத்தையும் இழந்து விடும்.

    இந்த வருடம் (2025) அக்டோபர் 2 ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், RSS-இன் தலைவர் மோகன் பகவத், நாக்பூரிலுள்ள RSS தலைமையகத்தில் வருடாந்திர விஜயதசமி உரையை நிகழ்த்தவிருக்கிறார். அந்த உரை, RSS அமைப்பு உருவானதற்கான நூற்றாண்டை மையமாக கொண்டு நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உரையில் முக்கியமாக, நாட்டின் முஸ்லிம் குடிமக்களுக்கு அவர் தெரிவிக்கப் போகும் செய்தி என்னவாக இருக்கும்.
    என்ன சொல்ல போகிறார் மோகன் பகவத்?

    RSS இன் மிகவும் செல்வாக்கு வாய்ந்த தலைவர்களில் ஒருவரான M.S. கோல்வால்கர், ஒருமுறை ஹிட்லர் தனது நாட்டை யூதர்களிடமிருந்து “இன சுத்திகரிப்பு” குறித்து பாராட்டியிருந்தார். அப்படிச் செய்யப்பட்ட படுகொலைக்கான முன்னேற்பாடுகளை, “இந்துஸ்தானில் நமக்கு ஒரு நல்ல பாடம்” என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, RSS தலைவர்களின் உரைகளில் முஸ்லிம்களை “அழித்தொழித்தல்” என்ற நோக்கம் குறைவாகவும், அவர்களை “சுத்திகரித்தல்” என்ற எண்ணம் அதிகமாகவும் வெளிப்பட்டுள்ளது.

    அதாவது கத்தோலிக்க மதக் கோட்பாட்டில், “purgation” என்பது சில ஆன்மாக்கள் சொர்க்கத்திற்குச்செல்லும் முன் அனுபவிக்க வேண்டிய சுத்திகரிக்கும் துயரக்காலமாகப் புரியப்படுகிறது. அதனால், “purgation” என்ற கருத்து இறுதியில் சமரசமும் மீண்டு வருவதற்கு (தாய் மதம் திரும்புதல்) அதுவும் மிகவும் நிச்சயமாக இருக்கும் வாய்ப்பை—குறிக்கிறது.

    கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு இப்படியான மீட்சிக்கான வாய்ப்பைப் பகவத் தொடர்ந்து காட்டி வருகிறார்; மேலும் தனது உரையிலும் அதையே மீண்டும் அலுத்தாமாக வலியுறுத்ததுவார்.

    2017ல், RSS அதன் வரலாற்றில் முதல் முறையாக, விஜயதசமி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போஹ்ரா சமூகத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான முநாவர் யூசுப் என்ற ஒரு முஸ்லிமை அழைத்தது, அடுத்த ஆண்டு, டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில், இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் “அடையாளத்தாலும் தேசியத்ததாலும் இந்து ஆவர்” என்று RSS தலைவர் வலியுறுத்தினார். அதோடு அவர் கூறியது: “ஹிந்து ராஷ்ட்ரம் என்றால் முஸ்லிம்களுக்கு இடமே இல்லை என்று அர்த்தமில்லை. அப்படியாகும் நாளில் அது இந்துத்துவம் அன்று.”

    அதேபோல், 2020 ஆம் ஆண்டின் விஜயதசமி உரையில், “இந்தியாவை தமக்கே சொந்தம் என ஏற்றுக்கொண்ட அனைவரும் ‘ஹிந்து’ என்ற சொல்லுக்குள் அடங்குவர்” என்றும், எனவே “நமது சமூகத்தில் உள்ள 130 கோடி மக்களுக்கும் அந்த சொல் பொருந்துகிறது” என்றும் பகவத் வலியுறுத்தினார்.
    இந்த உரைகளும் நடவடிக்கைகளும் சேர்ந்து ஆழ்மாக பார்த்தால், RSS ஒரு வகையான “ஒருங்கிணைப்பதற்கான திசை மாற்றம்” நோக்கிப் போகிறது. சங்க் அமைப்புக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமரசத்தின் பாதை உருவாகும் முன்னறிகுறிகளாக பொருள்படுகின்றன.

    RSS-ஐ நீண்ட காலமாகப் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் வால்டர் ஆண்டர்சன், மேலே குறிப்பிடப்பட்ட 2018 டெல்லி கருத்தரங்கில் பகவத் கூறியவற்றை “முஸ்லிம்களைப் பற்றிய RSS கருத்தின் வளர்ச்சி” பரிணமித்துள்ளதாக கருதுகிறார்.

    மேலும், ஆண்டர்சனின் ஆய்வை ஆழமாக வாசித்தால், RSS முஸ்லிம்களுக்கு எதிரான பகைமைத் தணிந்த அவசர நிலை காலத்திற்குத் தள்ளிச் செல்கிறது.
    அப்போது சங்க் தலைவர்கள் “முஸ்லிம்களுடன் சிறை வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டனர்”.

    ஆண்டர்சனின் அடுத்த முக்கியமாக கூறுவது:
    2002 ஆம் ஆண்டு RSS தலைவர் K.S.சுதர்ஷன் எடுத்த முடிவு தான் “இந்து முஸ்லிம் உறவுகளை மேம்படுத்துவதற்காக” முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சை அமைத்தது. அதனால் ஆண்டர்சனின் பார்வையில், முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது “சங்கபரிவாரத்திற்கான (சங்க் அமைப்புகள்)” செய்தியுடன் பகவத், சமரசத்தின் ஏணியில் அடுத்த படிக்குச் சென்று கொண்டிருக்கிறார். இதனை நாம் “உடனிணைவு கோட்பாடு” (Accommodation Thesis) என்று அழைக்கலாம்.

    அதன்பிறகு, இன்னும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு விளக்கமும் உள்ளது. அதன்படி, RSS முஸ்லிம்களை அணுகும் முயற்சியில், அவர்களை ஒரே மாதிரியான ஒரு அடையாளத்திற்குள் உட்புகுத்தி, சமுதாயப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. “ஒன்றாக்கும் (Assimilation) என்ற தர்க்கம் என்னவெனில், கீழ்மட்ட சமூகக் குழுக்களின் அடையாளச் சின்னங்களைத் தொடர்ந்து களைந்து அகற்றிக் கொண்டே சென்று, இறுதியில் அவர்கள் ஒரே மாதிரியான மேலோங்கிய அடையாளத்தில் கலந்துவிடும் வரை இணைப்பது.” இந்த செயல்முறைக்கான உதாரனமாக அடிக்கடி கூறப்படும் எடுத்துக்காட்டு, ஐரோப்பிய நாடு-மாநிலங்களின் உருவாக்கம்.

    “The RSS’ Plans to Resolve the Muslim Question” என்று பதற்றம் மூட்டும் தலைப்பில் 2022-ல் வந்த ஒரு கட்டுரையில், பத்திரிகையாளர் சானியா திங்ரா, முஸ்லிம்களை நோக்கி RSS காட்டும் அணுகுமுறையை, நீண்டகால இலக்கான “முஸ்லிம்களை இந்து அடையாளத்திற்குள் ’’ஒன்றாக்கும்” நன்கு திட்டமிட்ட நடவடிக்கை என்றே விளக்குகிறார். இந்த விளக்கத்தின் படி, RSS இன் நோக்கம் முஸ்லிம் அடையாளத்திற்கு இந்துத் தேசத்தில் தனியான சட்டப்பூர்வ இடமளிப்பது அல்ல; மாறாக, அவர்களின் அடையாளத்தை கரைத்தழித்து, எதிரியை “உட்கொள்வதே”. திங்ராவின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் முக்கிய கூறாக, முஸ்லிம் சமூகத்தின் கீழ்மட்ட சாதிப் பிரிவுகளான பஸ்மந்தா முஸ்லிம்களை நோக்கிய அணுகுமுறையாக அமைந்துள்ளது.

    இவ்விரண்டு கோட்பாடுகளின்: உடனிணைவு (accommodation) மற்றும் ஒன்றாக்கும் (assimilation) கோட்பாடுகள் சேரும் முக்கிய இடம் என்னவெனில், RSS மேற்கொள்ளும் இந்த அணுகுமுறையால் முஸ்லிம்களுக்கு உண்மையான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற பொதுவான நம்பிக்கையே.

    இவை வேறுபடுவது எதிலெனில், இந்த சமரசத்தின் நிபந்தனைகள் என்ன என்பது. அதாவது, முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தையும், அவர்களின் நலன்களையும், RSS எந்த அளவுக்கு இதில் சேர்க்கப் போகிறது என்பதில்தான். இந்த அணுகுமுறையின் விளைவாக, முஸ்லிம்களும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பாளர்களாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

    ஆண்டர்சனின் கூற்று படி, முஸ்லிம்கள் சமமான தரப்பினர்; சமரசத்தின் நிபந்தனைகளைப் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை அவர்களுக்கு உள்ளது. ஆனால் திங்ராவின் கருத்துப்படி, அந்த நிபந்தனைகள் பெரும்பாலும் RSS ஆல் முன்பே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. என்றாலும், திங்ராவின் விளக்கத்திலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையாக உள்ள பஸ்மந்தா குழுவிற்கு முன்னொரு காலத்தில் பழங்குடியினர் அல்லது தலித் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு போல இந்துத் தேசத்தில் சேர்வதற்கான ஒரு செயல்படக்கூடிய (ஆனால் கடினமான) வழி வழங்கப்பட்டிருக்கிறது.

    அவர்கள் தங்களின் தனிச்சிறப்பு அடையாளங்களைத் தளர்த்திக் கொள்ளலாம், RSSஇன் ஆதரவை ஏற்கலாம், மற்றும் இந்து நாட்டின் ஒருங்கிணைந்த அமைப்பில் இணையலாம்

    இந்த இரண்டு விளக்கங்களுக்கும் மாறாக, இந்த கட்டுரை வாதிடுவது என்னவெனில், முஸ்லிம்களைப் பற்றிய RSS இன் கருத்தியல் நிலைப்பாட்டில் எந்த உண்மையான “வளர்ச்சியும்” ஏற்படவில்லை. சமரசப்படுத்தும் முயற்சிகளும், ஒன்றாக்குவதன் மூலம் அச்சுறுத்தும் முயற்சிகளும் முடிவில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கற்பனை நாடகத்தின், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த இரண்டு கோடுகள் மட்டுமே.

    இந்த நாடகத்துக்கு, “முஸ்லிம் பிரச்சினை” என்ற ஒரு அழகான ஒப்பந்தத்தால் முடிவு அல்லது தீர்வு என்கிற இலக்கு கிடையாது. இது உருவாக்கப்பட்டதே, ஒரு நேரத்தில் பெருந்தன்மையையும், மற்றொரு நேரத்தில் பகைமையையும் வெளிப்படுத்தும் வகையில் மேடையில் கம்பீரமாக நடந்து வரும் ஒரு இந்து நாயகனை காட்டுவதற்காகத்தான்.

    அந்த நேரத்தில் எதிர் பாத்திரத்துக்கு (முஸ்லிம்) செய்ய ஏதும் இல்லாமல், விடுபட்டுச் செல்ல முடியாத ’’purgation’’ எனும் பின்னணிப் பகுதியிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.

    RSS கடந்த 100 ஆண்டுகளாக வெறும் இயக்கமாக பிழைத்து வரவில்லை. மாறாக, தொடர்ந்து பெரிய அமைப்பாக வளர்ந்ததுள்ளது. அதன் முக்கிய காரணம், மானுடவியலாளர் அர்ஜுன் அப்பாதுரை கூறுவது போல் “முழுமையற்ற பதட்டம்” என்று கூறும் உணர்வுக்கு ஆர்.எஸ்.ஏஸ் ஒரு வலுவான எதிர் மருந்தை (antidote) கொடுப்பதால் தான்.
    அப்பாதுரை கூறுவதன்படி, ஒவ்வொரு நாடும் தன்னுள் பல மதம், பல மொழி, பல கலாசாரம், பல சாதி போன்ற வேறுபாடுகள் கொண்ட மக்கள் கலந்து இருப்பதால், ஒரு வகையான பதட்டம் அந்த நாட்டை தொடர்ந்து பின்தொடர்கிறது. அதனால், அந்த நாடு “ஒரே இனத்தைச் சார்ந்த ஒரு சுத்தமான அடையாளம் இருந்தால் நல்லது” என்று விரும்பத் தொடங்குகிறது.
    இந்திய நாடு (குறிப்பாக மேலாதிக்கம் கொண்ட ஆட்சியாளர்கள் உள்ள இந்தியா) “முழுமையற்ற பதட்டம்” என்ற உணர்வை மிக அதிகமாக அனுபவிக்கிறது என்று நாம் கற்பனை செய்யலாம்.
    ஏனெனில் இந்தியா ஒரு தேசம், என்ற பெயரில் இருக்கும் போதிலும், கலாசாரம், மொழி, இனம், சாதி, மத வழக்கங்கள் போன்ற உலகிலேயே மிகக் குழப்பமான மற்றும் பல்வேறு அடையாளங்களின் பெரிய கலவையை வைத்திருக்கிறது.
    இந்த தேசிய பதட்டத்தை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது என்பதே RSS உருவாக்கிய சித்தாந்த மாயை. இதன்மூலம், மற்ற எல்லா பல்வேறு அடையாளங்களையும் “ஒரே இந்து அடையாளம்” என்ற அடித்தளத்திற்குள் ஒன்றுபடுத்தி விடுகிறது.

    இதனை இப்படி நினைத்துப் பார்க்கலாம்; பல நிறங்களைக் கொண்ட ஒளியை உள்ளே எடுக்கும் ஒரு கருவி, ஆனால் வெளியே காட்டும் போது இரண்டு நிறங்கள் காவி மற்றும் பச்சை மட்டும் தான் வெளிப்படும்.
    கலாசார வேறுபாடுகளின் பெரிய குழப்பத்தையும், அதனுடன் சேர்ந்து மக்கள் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையையும் இரண்டு பகுதி கொண்ட ஒரே மாதிரி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றும் பணியை RSS இந்திய தேசிய அரசுக்காக செய்து வருகிறது. இந்த வேலையின் காரணமாக, நாட்டின் உயர் சமூகம், ஆட்சியாளர்கள் (ப்யூரோக்ரசி) மற்றும் பொருளாதார உயர்வர்க்கத்தில் இருந்து RSS க்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கிடைக்கிறது.
    “ஒவ்வொரு இந்து இந்தியரும் இந்தியா நிலங்கள் முழுவதும் 100% இந்துக்களுக்கு இல்லை என்பதை அறிவார்கள்,” என்று அப்பாதுரை ஒரு பேட்டியில் சொல்கிறார். ஆனால் இது உண்மையாக மட்டும் இருந்தால் “சிறுபான்மையினரை முழுவதும் அழித்துவிட வேண்டும்” என்ற நோக்கத்துக்கு தானாகவே இட்டு செல்லாது, ஆயினும், 2002 குஜராத் கலவரம் போன்ற இடைக்கால வன்முறைகளாக வெடித்து அந்த எண்ணம் வெளிவரும் வாய்ப்பு இருக்கிறது.

    முழுமையற்ற பதட்டம்தான் குறிப்பாக இந்து-முஸ்லிம் பிளவை மையமாகக் கொண்டிருப்பதுதான், RSS ஐ உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் நிலைத்துள்ள, மிகப் பெரிய ஆதரவாளர்கள் கொண்ட வலதுசாரி அமைப்பாக மாற்றியதற்கான எரிபொருள். அதனால், இந்த பதட்டம் தொடர்ந்து உயிருடன் இருக்கவும், அடிக்கடி தூண்டப்பட்ட நிலையிலும் இருப்பதும் RSS-க்கு ஒரு நேரடி நலன் இருப்பதை தெளிவாக்குகிறது.
    நேரடியாக சொன்னால், முஸ்லிம் சமூகத்துடன் சமரசம் அல்லது இணக்கம் ஏற்படுவது, இந்து தேசியவாதத்தின் இறுதி வெற்றியல்ல. அதன் இறுதி முடிவை, அதன் மரணத்தை குறிக்கும்.
    மேலே கூறப்பட்டுள்ள மெல்லிய, கருத்தியல் புள்ளிகளை நன்கு புரிந்துகொள்ள, நாம் ஆய்வாளர் பெலிக்ஸ் பால் மேற்கொண்ட விரிவான கள ஆய்வை பார்க்கலலாம். அவர், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (MRM RSS இன் ஒரு இணை அமைப்பு) பற்றிக் கண்டறிந்துள்ளார். ஆண்டர்சன் மற்றும் திங்ரா இருவரும், RSS இன் முஸ்லிம் சமூகத்தை தொடர்புகொள்ளும் பணிகளில் மிக முக்கியமான பகுதி MRM தான் என்று கண்டறிந்துள்ளனர்.

    RSS உண்மையாக முஸ்லிம் சமூகத்துடன் இணக்கம் அல்லது இணைவைக் (accommodation/assimilation) செய்து கொள்ள விரும்புகிறது என்றால், அதற்கான தெளிவான ஆதாரம் குறைந்தபட்சம் இந்த மஞ்ச் நடத்தும் நிகழ்ச்சிகளில் குறிப்பாக “மதங்களின் கலப்பு”  (interreligious syncretism) போல அமைக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மேடைகளில் காணப்பட வேண்டும்.
    ஆனால் பால் கூறுவதன்படி, மஞ்ச் நடத்தும் இந்த “கலப்பு” நிகழ்ச்சிகள் உண்மையற்ற (insincere) நாடகங்கள். அவை உண்மையான சமரசத்தை உருவாக்குவதற்கல்ல மாறாக ‘இந்திய முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம்’  என்ற செய்தியை வெளிப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
    பால் கலந்து கொண்ட “சிங்க்ரெட்டிக்” (மதங்களின் கலப்பு எனக் கூறப்படும்) யோகா நிகழ்ச்சியில், மஞ்ச் தலைவரான இந்த்ரேஷ் குமார் மேற்பார்வை செய்தார்.
    அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடம் “ஜெய் ஸ்ரீ ராம்”  மற்றும் “அல்லாஹ் ஹூ” (இறைவன் மிக பெரியவன் என குறிக்கும் அகபர் என்று முழுமை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்தது.)  என்று முழக்கமிட சொல்லப்பட்டது. அங்கு இருந்த மௌலானாக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கத்தினர். ஆனால் அங்கு இருந்த எந்த இந்து சுவாமிகளும் “அல்லாஹ் ஹூ” என்று முழக்கமிடவில்லை. மத கலப்பு என்று வெளியே காட்டப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கூட, இந்து–முஸ்லிம் பிரிவு கட்டாயமாகப் பேணப்பட்டது என்று பால் கவனித்தார்.

    ’’அல்லாஹ் ஹூ” என்று சொல்ல மறுத்த சுவாமிகள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்ட மௌலானாக்களின் அருகில் கூட நிற்கவில்லை” என்று அவர் எழுதுகிறார்.

    ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு நிகழ்ச்சியில், மஞ்ச் சார்ந்த ஒரு இமாம் குர்ஆனின் மிகப் புனிதமான வசனத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, அவரது ஒலிவாங்கி பாதி வாசிப்பிலேயே பறிக்கப்பட்டது. காரணம், இந்த்ரேஷ் குமார் வந்துவிட்டார் என்பதை அறிவிப்பதற்காக. மஞ்ச் நடத்தும் ஒரு இப்தார் நிகழ்ச்சியில், ஒரு வயதான முஸ்லிம், இந்த்ரேஷ் குமார் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த போது, மரியாதையுடன், நோன்பை திறக்கலாமா என்று அனுமதி கேட்க எழுந்தார். அதற்கு இந்த்ரேஷ் குமார் “உக்காருங்க, வயதானவரே, நான் இன்னும் முடிக்கல” என்று கண்டித்தார். அத்துடன், அவர் முஸ்லீம்களை நோக்கி பேசுகையில், “நீங்க முதலில் உங்களை வன்முறையற்றவர்களாக மாற்றிகொள்ள வேண்டும். அப்போது தான் வன்முறையற்ற உலகத்தையும் உருவாக்க முடியும்.” இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில், இதை கூறிய இந்த்ரேஷ் குமார் — 2007 மெக்கா மச்ஜித் வெடிப்பு வழக்கில் தொடர்புடையர் என சிபிஐயால் விசாரனைக்கு அழைக்கப்படவர். மேலும் 2007 அஜ்மீர் ஷெரீப் வெடிப்பு வழக்கில் ராஜஸ்தான் போலீஸின் chargesheet ல் இடம் பெற்றவர்.
    “மஞ்ச் சிங்க்ரெட்டிசம் என்பது முஸ்லிம்கள் இந்துத்துவத்துக்கு நெருக்கமாக வருவதைப் போலத் தோன்றும். ஆனால் அவர்கள் அந்த நெருக்கத்தை ஒருபோதும் உண்மையில் அடையவிடமால் RSS உறுதி செய்கிறது. மஞ்ச் முஸ்லிம்கள் கட்டாயம் இந்துத்துவத்தின் திசையில் செல்ல முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதை அடைய கூடாது. சில வகையில் இது ‘ஹேசிங்’ சடங்குகளில் இருப்பது போலவே ஒரு அதிகார உறவை உருவாக்குகிறது.

    ஹேசிங் என்பது பல்கலைக் கழகங்கள், ராணுவ பிரிவுகள், விளையாட்டு குழுக்கள் போன்றவற்றில் நடைபெறும் துவக்கச் சடங்குகளின் ஒரு வடிவம். இதில் புதியவர்கள் தாழ்வான பணிகளைச் செய்ய வேண்டும். குழுவின் மூத்த உறுப்பினர்களை புகழ வேண்டும் அல்லது தங்களையே சடங்காய் அவமதிக்க வேண்டும். இந்த செயல்முறை, அதிகாரம் கொண்டவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டது என்று பல அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

    இந்த சடங்குகள் ‘ஹேசிங்’ செய்பவர்களுக்கு மிக வலுவான உணர்ச்சி ஆதாயத்தை அளிக்கின்றன. அவர்கள் அதிகாரமும் மேலாதிக்கமும் கொண்டவர்கள் என்ற உணர்வை பெறுவதற்காக. ஆனால், பால் ஒரு முக்கியமான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.

    ஹேசிங் (புதியவர்கள் மீது செய்யப்படும் அவமதிப்பு/ஆதிக்கச் சடங்குகள்) நடைமுறைகளுக்கும், RSS நடத்தும் கீழ்ப்படிதல் சடங்குகள்  எனப்படும் நடைமுறைகளுக்குமான பெரிய வித்தியாசத்தை இந்த கட்டூரை எடுத்துரைக்கிறது. அதாவது, RSS முஸ்லிம்களுக்கு வழங்குவது “வெளியேற முடியாத ஒரு சுத்திகரிப்பு” மட்டுமே. அவர்கள் எப்போதும் கீழ்மட்டத்தில் வைத்துக் கொள்ளப்பட்டு, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காத ஒரு நிலை ஆகும்.

    ஹேசிங் மற்றும் “நோக்கத்துடன் ஆனால் ஒருபோதும் முழுமையடையாத நெருக்கம் (intentionally incomplete proximity) இவை இரண்டிலும் கீழ்ப்படிதல் சடங்குகள் இருக்கின்றன. ஆனால் ஹேசிங்கில், இறுதியில் அந்த மனிதர் குழுவுக்குள் சேரும் வாய்ப்பு கிடைக்கும். RSS உருவாக்கும் நெருக்கத்தில், அந்த வாய்ப்பு திட்டமிட்டே முழுமையற்றதாகவே வைக்கப்படுகிறது.

    முஸ்லிகள் இந்துத்துவத்திற்குள் வர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் இன் இலக்கு அல்ல. அல்லது “குழுவில் சேர வேண்டும்’’ என்பதும் இலக்கு அல்ல. அப்படியானால் இந்த கருத்து (intentionally incomplete proximity) ஒரு சடங்குபூர்வமான பயணம் மட்டுமே.

    RSS தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையும், விஷமதனங்களையும் செய்து வரும் நிலையில், இந்த பயணம் முஸ்லிம்களை மேம்படுத்தும் ஒரு கற்றல் முறையாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. “அப்படியானால், முக்கியமானது இந்துத்துவதிற்குள் வருவது அல்ல. வருவது போல் முயற்சி செய்துக்கொண்டிருப்பது. அந்த முயற்சியாளர்க்கான பயன், முயற்சி செய்பவருக்கே (முஸ்லிம்களுக்கு) கிடைக்கவில்லை என்றால், இந்த இயக்கம். அல்லது இந்த இயக்கம் காட்டும் தோற்றம் மற்றவர்கள் பார்த்து ரசிக்கவும், நுகரவும் கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்பதில் சந்தேகம் இல்லை.

    நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், RSS நடத்தும் “முஸ்லிம்களை அணுகுவது” என்ற பிரச்சாரத்தின் உண்மையான பார்வையாளர்கள் முஸ்லிம்கள் அல்ல. அதன் இந்து தேசியவாத ஆதரவாளர்களே (அதோடு ஆண்டர்சன் மற்றும் திங்ரா போன்ற பார்வையாளர்களும்).
    இதில் பால் கவனித்தது என்னவெனில், மஞ்ச் அமைப்பின் பேஸ்புக் பக்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இந்து தேசியவாதிகள். அவர்கள் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இது போன்ற பெரும்பான்மையான சடங்குகளை பார்த்து ரசிப்பதற்காக அங்கே இருக்கிறார்கள் என்பது தான்.
    அப்படியானால், நாட்டுக்குள் “இந்து” மற்றும் “முஸ்லிம்” எங்கு நிற்க வேண்டும் என்று RSS உருவாக்கும் குறியீட்டு (symbolic) படம், இணக்கம் (accommodation)  அல்லது இணைவு (assimilation)  என்ற கோட்பாடுகளுடன் முற்றிலும் முரண்படுகிறது.

    இப்போது நாம் RSS ன் காட்டும் வழிமுறையை எடுத்துகொள்ளலாம்.
    ஹிந்துத்துவா விரும்பும் தனது இறுதி நிலையை (idealised end-state or telos) இந்துத்துவத்தின் இந்த பொய்யான நிலையை “வாகுப்புவாத கற்பனை”  (communal fantasy) என்று நாம் அழைக்கிறோம்.
    “வாகுப்புவாத கற்பனை” என்ற இந்த கருத்து, அறிஞர் டாட் மெகோவன் (Todd McGowan) தனது The Racist Fantasy: Unconscious Roots of Hatred  என்ற புத்தகத்தில் விளக்கிய “இனவாத கற்பனை”  (racist fantasy) என்ற கூற்றில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. மெகோவனின் படி, இனவாத மனநிலை ஒரு குறிப்பிட்ட கற்பனை அமைப்பில் (fantasy structure) உருவாகிறது. அதில் மூன்று முக்கிய பாத்திரங்கள் உள்ளன:

    1. தான் (the subject)
    2.  தான் ஆசைப்படும் பொருள் அல்லது நிலை (the desired object)
    3.  அதை அடைவதற்கு தடையாக நிற்கும் “மற்றவர்” (the other/obstacle)
    4. RSS ன் இனவழி கற்பனையில்:
    •  “தன்னை” = இந்து நாடு
    •  ஆசைப்படும் இலக்கு (object) = “அகண்ட் பாரத்” (Akhand Bharat)
    •  தடை / எதிரி (the other) = முஸ்லிம்

    RSS தலைமையினர் பெரும்பாலும் நாட்டை ஏற்கனவே ஒரு இந்து ராஷ்ட்ரம் (இந்து நாடு) என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதுவே நமது இயல்பான நிலை என்று வாதிட்டு வருகின்றனர்.
    ஆனால் இதில் ஒரு முக்கியமான பொருள் உள்ளது. அவர்கள் கூற்றுப்படி, அந்த இந்து நாடு என்ற பொருள் (subject)  எப்போதும் “அடிப்படையில் அச்சத்தில் இருக்கும் ஒன்று”  (ontologically insecure) அதாவது,  எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தப்படுவது குறிப்பாக “அரக்க குணம் கொண்ட முஸ்லிம். மேலும், இந்து சமூகத்தின் உள்ளேயே உள்ள பிளவுகள், பிரிவுகள், மற்றும் மாறுபட்ட சமூக உணர்வு. இந்த அச்ச நிலைமை, RSS-க்கு தன்னை இந்து நாட்டின் முக்கிய காவலர், முன்னணித் தலைவர், முக்கிய வழிகாட்டி எனத் திகழ்வதற்கான நெறிமுறை உரிமையைக் (moral legitimacy) வழங்குகிறது.

    இதனால் RSS கூறும் செய்தி, இந்து நாடு எதிரிகளால் அச்சுறுத்தப்படுகிறது. எனவே இந்து சமூகத்தின் சமூக உணர்வை சரியாக மாற்றி, அந்த எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தலைமைத்துவத்தை வழங்கும் முக்கிய பொறுப்பு நமக்கே (RSS) உள்ளது. இதுவே அவர்கள் தங்கள் அரசியல் மற்றும் வகுப்புவாத செயல்களுக்கு வழங்கும் “நெறிமுறை நியாயம்”.
    RSS-ன் முக்கிய இலக்கு அகண்ட பாரத். இதை “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாசாரம், ஒரே தேசம்” என்று விளக்கலாம். இந்து நாடு எப்போதும் “அடிப்படையாக அச்சத்திலிருக்கிறது” (ontologically insecure) என்று RSS கூறுவது, அவர்களின் அகண்ட பாரத் கற்பனையில் தெளிவாகப் தெரிகிறது. RSS மதிக்கும் அகண்ட பாரத் வரைபடத்தில் இந்தியா மட்டும் இல்லை. முழு தெற்காசிய துணைக்கண்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. RSS ஒருபோதும் இந்திய பிரிவினையை (Partition)  உறுதியான, முடிவடைந்த வரலாற்று உண்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இன்னும் “இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும்” என்ற கற்பனையை கொண்டுள்ளார்கள்.

    உண்மையில், RSS கிளைகள் இன்று வரை ஆகஸ்ட் 14 ஐ “அகண்ட பாரத் சங்கல்ப் திவஸ்” எனக் கொண்டாடுகின்றன. இந்த நடைமுறை சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆண்டுகளிலிருந்தே தொடங்கியது.
    மோகன் பக்வத், RSS ன் இந்த அகண்ட பாரத்  இலக்கில் உள்ள உறுதியை மீண்டும் வலுப்படுத்தியுள்ளார். 2022 ல் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பக்வத் பேசுகையில், அகண்ட பாரத் ஒரு மறுக்கமுடியாத உண்மை. பிரிந்த பாரதம் ஒரு பயங்கரமான கெட்ட கணவு (nightmare). மேலும், “பிளந்த உடல் உயிர்வாழ முடியாது. அதை சரிசெய்ய வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்ததால் இன்பமற்று உள்ளது, ஒருநாள் அது இந்தியாவுடன் இணைந்து அகண்ட பாரத்திற்குத் திரும்பும் என்றும் அவர் வாதிட்டார்.
    அதே ஆண்டு ஹரித்வாரில் நடந்த மற்றொரு நிகழ்வில், பக்வத் அகண்ட பாரதம் உருவாகும் நாள் மிக நெருக்கத்தில் உள்ளது  என்று கூறினார். ஏற்கனவே பயணித்தில் இருக்கிறோம். நமது காரில் பிரேக் இல்லை. ஆக்சிலரேட்டர் மட்டுமே உள்ளது. எதிரில் யார் வந்தாலும் அவர்கள் அழிந்துவிடுவார்கள். வந்துசேர விரும்புபவர்கள் எங்கள் காரில் ஏறலாம். இந்த கார் நிற்காது. நாம் இன்றைய வேகத்திலேயே சென்றால், அகண்ட பாரத் அடுத்த 20–25 ஆண்டுகளில் நிஜமாகும். ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் அதிக முயற்சி செய்தால், நிச்சயமாக செய்வோம் அந்த காலம் பாதியாகக் குறைந்து, அதை 10–15 ஆண்டுகளுக்குள் நிஜமாக்கலாம்.

    இதுகுறித்து RSS செயல்பாட்டாளர்கள் கூறுகையில், பகவத்தின் இந்த கருத்துகளை, இந்தியாவை தலைமையாக கொண்டு அண்டை நாடுகள் அனைத்தும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு (confederation) என்ற பார்வையாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
    எதுவாக இருந்தாலும், அகண்ட் பாரத்  என்ற ஆர்.எஸ்.எஸ் ன் கற்பனையின் பின் கருத்தை. மெகோவன் கூறுவது போல “கற்பனையில், அந்த இலக்கு (object) உண்மையில் முக்கியமல்ல. அதன் ஒரே முக்கியத்துவம், அது ஒருபோதும் அடைய முடியாதது என்பதே. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு தடையாக நிற்பது மற்றவர் தான்.
    அதாவது, அந்த ‘இனப்பிரிவு செய்யப்பட்ட மற்றவர் (முஸ்லீம்)
    தான் அகண்ட பாரதத்தை அடைய முடியாததற்கான முக்கிய தடையாக செயல்படுகின்றனர்.”

    மெகோவன், ஜெர்மன் தத்துவஞானி யோஹன் கோட்லீப் பிச்தே (Fichte) கூறிய வாதத்தை அடிப்படையாகக் கொள்கிறார்.
    ஃபிச்தே கூறியது, “நாம் நம்மையும் உலகையும் ஒரு ‘சுய-உருவாக்கம்’ (self-positing) மூலம் உருவாக்குகிறோம். ஆனால் இந்த சுய உருவாக்கம் எப்போதும் ஒரு தடையை சந்திக்கும். அந்த தடை நம்மை வரையறுக்க மட்டுமல்ல;
    அதை மீற முயல்வதற்கும் நம்மை தொடர்ந்து தள்ளுகிறது.”

    இந்த வாதத்தை RSS இன் சூழலுக்கு பயன்படுத்தினால், அர்த்தம் தெளிவாகிறது.
    முஸ்லிம் “மற்றவர்” என்ற உருவகம் இல்லாமல், இந்து நாடு “அடிப்படையாக அச்சத்திலிருக்கும் (ontologically insecure) ஒன்றாக இருக்க முடியாது. அதனால் அகண்ட் பாரத் என்ற கற்பனைக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. மேலும் RSS தன்னை இந்து நாட்டு காவலர் / பாதுகாப்பிற்கான அவசியமான அமைப்பு”
    எனக் காட்டிக்கொள்ளும் நெறிமுறை உரிமையையும் (moral legitimacy) இழந்து விடும். இதனால் RSS அமப்பிற்கான இருந்தலுக்கான காரணமும் அழிந்துவிடும். RSS தலைமையின் பார்வையில், இந்த வகுப்புவாத கற்பனையின் (communal fantasy) முக்கியத்துவம் வெறும் உணர்ச்சி ஈர்ப்பைத் தாண்டி செல்கிறது. இந்த கற்பனையின் முக்கிய அம்சம், “மற்றவர்” (முஸ்லிம்) என்ற உருவகம் RSS க்கு சமூக நிலைமை எப்படி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டும் வரைபடத்தை வழங்குகிறது.

    அதாவது, எது முக்கியம்? எது சமரசமாக ஏற்கக்கூடியது? எது விரும்பத்தக்க நிலைப்பாடு? இவற்றை தீர்மானிக்க RSS இந்த கற்பனையைப் பயன்படுத்துகிறது.
    உதாரணம்: கடந்த ஆண்டு விஜயதசமி உரையில், மோகன் பக்வத் கூறுகையில், இந்துக்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு காரணம், அவர்கள் பிரிந்தும் இருப்பதும், பலவீனமாக இருப்பது தான்.
    மகாராஷ்டிராவில் நடந்த விநாயகர் ஊர்வலங்களின் மீது நடந்ததாக கூறப்படும் (முஸ்லிம்) தாக்குதல்களை அவர் குறிப்பிட்டார். பங்களாதேஷில் இந்து சிறுபான்மையினரின் மீது நிகழும் (முஸ்லிம்) கொடுமைகளுக்கும், இந்துக்கள் பலவீனமாக இருப்பதே காரணம் என வாதிட்டார். இந்த தர்க்கம் RSS சிந்தனையில் ஆழமாக வேறூன்றியுள்ளது.
    இந்த தர்க்கத்தை பயன்படுத்தி அவர்கள் எல்லாவற்றையும் விளக்குகிறார்கள்: உதாரணத்திற்கு பிரிவினை (Partition) முதல் “ஆயிரம் ஆண்டுகள் அடிமை” என்ற கதை வரை. (அதில் “முஸ்லிம் ஆட்சி” மற்றும் “பிரிட்டிஷ் ஆட்சி” இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன) பாரத்திற்கு இருக்கும் ஒரே பாதுக்காப்பு உத்தரவாதம் இந்து ஒற்றுமையே. அதனால், பகவத், உயர்சாதி இந்துக்கள் (privileged-caste Hindus) தங்களின் தலித் சகோதரர்களை அணைத்து, ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று மிக வலுவான அழைப்பை விடுத்தார். அதை அவர் “ராஜ்புத்–வால்மீகி மாடல்” என எடுத்துக்காட்டினார்.
    அதே சமயம், தலித், பழங்குடி, மொழி சார்ந்த மற்றும் பெண்ணிய அரசியல்களை, துரோகம் நிறைந்த அடையாள அரசியல் (‘வோக்கிசம்) மற்றும் ‘கலாச்சார மார்க்சிசம்’ எனக் கூறி, அவற்றின் நியாயத்தையே (legitimacy) அவர் மறுத்துவிட்டர்.

    RSS-ன் முதல் சர்சங்க்சாலாக் (தலைவர்) K.B.ஹெட்கேவர், முஸ்லிம்களை “யவன பாம்புகள்” என்று குறிப்பிடுவார். யவன என்பது சமஸ்கிருதத்தில் கிரேக்கரை குறிக்கும் சொல் — அதாவது வெளிநாட்டவர், இன்னொருவர், அந்நியர் என்ற அர்த்தம். இந்த கற்பனையில், இந்து உடல் (Hindu body) இந்த “நச்சு கலந்த வெளிநாட்டவரை” (toxic alien) உள்ளே அனுமதித்தால், இறுதியில் அதன் முடிவு மரணமே. இதில், முக்கியமானது என்னவெனில் தேள்களின் நடனம்  தொடர வேண்டும். இந்து, முஸ்லிம் இருவரும் எப்போதும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கையாகச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் யாரும் ஒருவருக்கொருவர் அழிக்கும் அளவுக்கு துல்லியமான தாக்குதல்  தொடுக்கக் கூடாது. இந்த “நடனத்தில்” உண்மையில் விழுங்கப்படும் ஒரே விஷயம்.  புறக்கணிக்கப்பட்ட இந்து சமூகங்களின் எதிர்ப்பு உணர்வு தான்.
    அவர்களின் அரசியல் விழிப்புணர்வும் உரிமைக் குரலும் பெரிய இந்துத்துவ நோக்கத்தில் “அழுத்தப்பட்டு ஜீரணமாகிறது”.
    இதற்கிடையில் சேர்த்துகொள்ளப்படாத  (unaccommodated) முஸ்லிம் “மற்றவர்” என்ற உருவகம் RSS அமைப்பின் இருத்தலுக்கான அடிப்படை காரணமாக உள்ளது. அதன் சித்தாந்தத்தின் இறுதி இலக்கை (telos) வரையறுப்பது,  அதன் திட்டங்கள், அரசியல் வழிகள் எது என்பதைக் உருவாக்கும் போது மற்றவர் என்ற கருத்து அடிப்படையாக செயல்படுகிறது.
    இந்த அர்த்தத்தில், மோகன் பக்வத் கூறியதை நாம் பார்த்தோமானால்,  முஸ்லிம்கள் இல்லாமல் ஹிந்துத்துவம் இருப்பதே இல்லை என்பது தான்.
    (அதாவது “மற்றவர்” இல்லாத இந்துத்துவ கற்பனை செயல்படாது.)

    Asim Ali : No Muslim, no Hindutva என்கிற தலைப்பில் Front line இதழில் Sep 24, 2025 இல் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு.

    ஆசிரியர் அசிம் அலி

    மொழி பெயர்ப்பு : சம்சீர் அஹமது.

  • கட்சி அரசியல் தாண்டிய வர்க்க அரசியல்: தூய்மைப் பணி வெளிமுகமையும் தவெக அரசின் நகர்வும்!

    கட்சி அரசியல் தாண்டிய வர்க்க அரசியல்: தூய்மைப் பணி வெளிமுகமையும் தவெக அரசின் நகர்வும்!

    சென்னைப் பெருநகர மாநகராட்சியில் (GCC) ஏற்கனவே பல மண்டலங்களில் தூய்மைப் பணிகள் வெளிமுகமைக்கு (Outsourcing) விடப்பட்டு, அங்கு காலம் காலமாக உழைத்த தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மையற்ற தினக்கூலிகளாக மாற்றப்பட்ட கசப்பான வரலாற்றை நாம் அறிவோம். தற்போது, தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளிலும் உள்ள மண்டலங்களைத் தனியார்மயமாக்கும் இலக்குடன், அதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தவெக (TVK) அரசு தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது.

    இங்கே நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தக் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும், ஆகக் கடைமட்ட உழைப்பாளியின் நிலைமை எப்போதும் நிச்சயமற்ற (Precarious) தன்மையிலேயே நிலைநிறுத்தப்படுகிறது. ஆகையால்தான் சொல்கிறேன்—தனி நபர் ஒருவரையோ (விஜய்) அல்லது ஒரு புதிய கட்சியையோ (தவெக) முன்வைத்து, “அவர் வந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்று சாமானிய மக்கள் நம்புவது அவர்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் அறிவு போதாமையையே காட்டுகிறது.

    தேர்தல் நிதியும் முதலாளித்துவச் சார்பும்

    இங்கே மாற வேண்டியது கட்சி அரசியல் அல்ல; மாறாக “வர்க்க அரசியல்” (Class Politics) முன்னிலைக்கு வர வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது தொழிலாளர் நலனில் மெய்யான அக்கறை கொள்கிறதா, தொழிலாளர்கள் குறித்த தெளிவான கொள்கைகள் அந்தக் கட்சியிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து, அதன் பிறகே தொழிலாளர் வர்க்கம் அவர்களை ஆதரிக்க வேண்டும்.

    ஏனெனில், தங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட முதலாளிகள் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வாரி வாரித் தேர்தல் நிதி வழங்குகிறார்கள். அதன் மூலம், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்குச் சாதகமான கொள்கைகளையே நிறைவேற்றும் வண்ணம் அந்தத் தலைவர்களைத் தங்களின் பிடிக்குள் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

    நமது தவறும் ஏமாற்றமும்

    ”இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் உழைக்கும் வர்க்கமான நமக்கு என்ன செய்யப் போகிறது?”

    ஆனால், தொழிலாளர்களாகிய நாம்தான் ஒவ்வொரு தேர்தலிலும் “இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் உழைக்கும் வர்க்கமான நமக்கு என்ன செய்யப் போகிறது?” என்ற அடிப்படையான கேள்வியைக் கூட எழுப்பாமல், வெறும் முகங்களைப் பார்த்து வாக்களித்து விடுகிறோம். பிறகு, அவர்கள் ஆட்சியில் அமர்ந்து நம் வயிற்றிலடிக்கும் கொள்கைகளைக் கொண்டு வரும்போது, வேறு வழியின்றி வீதிக்கு வந்து போராடக் கிளம்பி விடுகிறோம்.

    மீண்டும் ஒரு புதிய தலைவன் வருவான், ஒரு புதிய கட்சி தோன்றும்; அவர்கள் மீண்டும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து நம்மை ஏமாற்றுவார்கள். நாமும் அவர்களை நம்பி ஓட்டுப் போடுவோம். இந்தச் சுழற்சி மாற வேண்டும். ஒருமுறை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கும் நிலைக்கு உழைக்கும் வர்க்கம் வந்துவிட்டால், எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவனும் நம்மை ஏமாற்றத் துணிய மாட்டான்.

    தேவை பாட்டாளி வர்க்க அரசியல்!

    இதற்கு நமக்குத் தேவை கட்சி அரசியல் தாண்டிய “வர்க்க அரசியல்”—அதாவது பாட்டாளி வர்க்க அரசியல்.

    தன் திரைத்துறையின் (Career) உச்சத்தில் இருந்து, 250 கோடி ரூபாய் சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வரும் ஒரு நபர், நமக்காக உழைப்பார், நமக்கு நல்லது செய்வார் என்று நம்பும் அளவிற்கு நம்முடைய அரசியல் அறிவு மழுங்கடிக்கப்பட்டுக் கிடப்பதே நமது ஒட்டுமொத்தத் தோல்விகளுக்கும் முதன்மைக் காரணம். முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு, ஒரு தனிநபர் இரட்சகரால் நம் வாழ்வை மாற்றிவிட முடியும் என்ற மாயையை உடைத்து, உழைப்பவர்களுக்கான அரசியலை நாம் கையில் எடுக்காதவரை விடிவு என்பது சாத்தியமில்லை.

  • நாடாளுமன்றப் போலித்தனமும் பாசிசத்தின் முளைகளும்: தமிழகச் சட்டமன்ற அவலமும் உழைக்கும் வர்க்கத்திற்கான எச்சரிக்கையும்!

    முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் என்பவை வெறும் அரட்டை அங்கங்கள்; அவை உழைக்கும் மக்களை ஏமாற்றி, முதலாளித்துவச் சுரண்டலைத் தக்கவைக்கவே பயன்படுகின்றன என்ற மார்க்சியப் பேரறிஞர் லெனினின் வரிகள், இன்றைய 2026-ஆம் ஆண்டின் தமிழ்நாட்டுச் சட்டமன்றச் சூழலில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்குமிடையே நடந்த தனிநபர் தாக்குதல்களும், மாண்பற்ற விவாதங்களும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் கூடி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை விவாதிக்க வேண்டிய அந்த அரங்கம், இன்று தனிநபர் குரோதங்களைத் தீர்த்துக்கொள்ளும் மேடையாகத் தரம் தாழ்ந்து நிற்பது முதலாளித்துவ ஜனநாயகத்தின் அழுகிப்போன முகத்தையே காட்டுகிறது.

    சட்டமன்ற அவலமும் தனிநபர் தாக்குதல்களும்

    முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோல்விகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் கதைகள் பேசுவதும், அதற்குப் பதிலடி தருவதாகக் கூறி விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சிப்பதும் அருவருப்பின் உச்சமாகும்.

    • திமுகவின் போலி அனுபவம்: 70 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் திமுக, சட்டமன்ற மாண்பைக் காக்கத் தவறி அதே தரம் தாழ்ந்த அரசியலுக்குள் மூழ்கியுள்ளது.
    • தவெக-வின் பொறுப்பற்ற தன்மை: மாற்றத்தைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய தவெக, தனது முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுத் தனது வர்க்கக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    தேர்தல் அரசியலில் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோதச் செயல்களைப் பிரச்சாரம் செய்து, அந்த மக்கள் அலை அலையாகப் போட்ட வாக்குகளால் ஆட்சியில் அமரும் எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும், ஆட்சிக்கு வந்தபின் மக்கள் பிரச்சினைகளைப் பேசாது என்பதற்குத் தவெக-வும் விதிவிலக்கல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

    ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ்’ (Stage Performance) கொண்டாட்டமும் பாசிச அபாயமும்

    முதலமைச்சர் விஜய்யின் இந்தத் தரம் தாழ்ந்த செயலைக் கண்டு சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களும், பொதுமக்களும் முகம் சுழித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது ரசிகர் பட்டாளமும் சமூக வலைத்தளப் படைகளும் அதனை ஒரு ‘மாஸ் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ்’ (Mass Stage Performance) ஆகக் கொண்டாடி வருகின்றன. “உதயநிதியைத் தலைவர் தாக்கிவிட்டார், திமுகவைப் பங்கம் செய்துவிட்டார்” என்று அவர்கள் எழுதும் பதிவுகள், தீவிரமான பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.

    நாளை முதலமைச்சர் என்ன தவறான கொள்கையைக் கொண்டு வந்தாலும், அதனைச் சுயசிந்தனையின்றி வரவேற்கும் இந்த விசுவாசக் கூட்டம், பகுத்தறிவு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்தாக முடியும். இது ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு வித்திட்ட அதே வரலாற்றுப் புள்ளியாகும்.

    உலகளாவிய வலதுசாரிப் போக்கும் நவீன நாசிசமும்

    இன்றைய நவீன தாராளமய (Neo-liberal) காலத்தில், உலகெங்கிலும் வலதுசாரிச் சக்திகள் மீண்டும் ஆட்சியில் அமர்வதும், தங்களை நவீன நாசிஸ்டுகளாக (Neo-Nazis) அடையாளப்படுத்திக் கொள்வதும் ஒரு பொதுவான உலகளாவியப் போக்காக (Global Trend) மாறியுள்ளது.

    • உலகச் சூழல்: அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை, கார்ப்பரேட் முதலாளித்துவ நெருக்கடிகளை மறைக்கத் தீவிர வலதுசாரிகளும், போலிப் பாப்புலிச (Populism) தலைவர்களும் முன்நிறுத்தப்படுகிறார்கள்.
    • இந்தியச் சூழல்: இந்திய அளவிலும் பெருநிறுவன முதலாளித்துவமும் (Crony Capitalism) மதவாத/வலதுசாரி பாசிசமும் கைகோர்த்து உழைப்பவர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. தமிழகத்தில் தவெக மற்றும் திமுக போன்ற கட்சிகள் இந்த உலகளாவிய முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளேயே இயங்குவதால், அவையும் இதே பாசிசப் போக்குகளுக்குத் தீனி போடுபவையாகவே மாறுகின்றன.

    தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கைகள் காட்டுவது போல, மாநிலத்தின் கடன் சுமையும், வருவாய் பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நவதாராளமயக் பொருளாதாரக் கொள்கைகள் எதிர்காலத்தில் ஒரு கடுமையான பொருளாதார மந்தநிலையை (Economic Stagnation) உருவாக்கும்.

    இந்த நெருக்கடி தீவிரமடையும் போது ஏற்படும் அரசியல் கொந்தளிப்புகளை, வர்க்க ரீதியாக இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தால் ஆபத்தானது. பொருளாதார ரீதியாக வஞ்சிக்கப்பட்ட, வேலைவாய்ப்பற்ற இளைஞர் படை, தவெக போன்ற கட்சிகளின் பின்னால் வெறும் கண்மூடித்தனமான “விசுவாசிகளாக” அணிதிரட்டப்படும் போது, அது பாசிசத்தின் இரும்புக்கரமாக மாறி உழைக்கும் வர்க்கத்தின் மீதே பாயும் அபாயம் உள்ளது.

    தேவை சரியான வர்க்க அரசியல் விழிப்புணர்வு

    இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளின் போலி மாயைகளில் சிக்காமல், சரியான “மார்க்சிய வர்க்க அரசியலைத்” தேர்ந்தெடுத்துத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது முக்கியமாகும்.

    சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் சொல்லளவில் மக்கள் மன்றங்களாகவும், உள்ளடக்கத்தில் அவை முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ‘முதலாளி மன்றங்களாகவுமே’ செயல்படுகின்றன. இந்த அமைப்பை மாற்றியமைக்க, தனிநபர் வழிபாட்டு அரசியலைக் கடந்து, உழைக்கும் வர்க்கத்தின் சுயமுன்னேற்றத்திற்கான, சுரண்டலுக்கு எதிரான சோசலிச அரசியலை நோக்கி இளைஞர்கள் அணிதிரள வேண்டும். அதுவே இன்றைய வரலாற்றுத் தேவை!